Monday 3 October 2011

ஜோதிடத்தில் யோகங்கள்


ஜோதிடத்தில் யோகங்கள் :

            ஒருவருடைய ஜாதகத்தில் எந்த ஒரு கிரகமாவது ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அந்த ஜாதகம் யோக ஜாதகம் என்பர் . ஒரு கிரகம் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர் நிச்சியமாக தனது வாழ்வில் உன்னதமான ஒரு நிலையை அடைவர் என்பது ஜோதிட விதியாகும். இரண்டு அல்லது மூன்று கிரகங்கள் உச்சமாக இருந்தால் அந்த ஜாதகர்  நல்ல யோக பாக்கியத்தை அடைவர் என்றாலும் ஒரு உச்ச கிரகத்தை மற்றொரு உச்சமடைந்த கிரகம் பார்க்க கூடாது. அவ்வாறு பார்த்தால் அந்த யோகா பாவம் நசிந்துவிடும். பலன் எதிர்மறையாக நடக்க ஆரம்பித்துவிடும். இதைதான் கிரந்தங்கள்

    " உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சைக்கு போனாலும்  பிச்சை இல்லை "

           என்று குறிப்பிடுகின்றன. சர்க்கரை தான் ஆனால் வயிறு நிரம்ப சர்க்கரையை சாப்பிட முடியாது என்பதே விதியாகும். அப்படியானால் உச்சம் பெற்ற கிரகத்தை பெற்றவர்கள்தான் ஆனால் வெகு சாதாரணமான பலன்களைக் கூட அனுபவிப்பது என்பது கடினமாகும். ஆனால் ஒரு சிலர்  எந்த கிரகமும் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இல்லாவிட்டால் கூட வாழ்வில் உன்னத நிலையை அடைந்து விடுவர். இதற்கு காரணத்தை ஆராயும்போது " யோகங்கள் " என்ற உண்மை தெரியவரும் ஜோதிடத்தில் யோகங்கள் என்பது மிக முக்கியமானதாகும், ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் ஒன்று சேரும்போது அல்லது ஒன்றை ஒன்று பார்க்கும்போது அல்லது ஒன்றுக்கு ஒன்று கேந்திரத்தில் அல்லது திரிகோனத்தில் இருக்கும்போது அவை அபரிமிதமான யோகத்தை பெற்று மிக சிறந்த பலன்களை உண்டாக்கி விடுகின்றன. இது ஒரு கிரகம் ஆட்சி பெறுவதைவிட பலம் அதிகமாகும். இந்த யோகங்கள் சில நூற்றுக்கணக்கில் இருந்தாலும் அவைகளில் மிக முக்கியமான யோகங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
சுப கத்திரி யோகம்
பாப கத்திரி யோகம்
புதாத்திய யோகம்
கஜ கேசரி யோகம்
சந்நியாசி யோகம்
தர்ம கர்மாதி யோகம்
துருதுரா யோகம்
அன்பா யோகம்
சுனபா யோகம்
கேமதுரும யோகம்
சந்திர மங்கள யோகம்
அதி யோகம்
சகட யோகம்
வேசி யோகம்
வாசி யோகம்
சுப உபயசாரி யோகம்
அஷ்டலக்ஷ்மி யோகம்
குரு சண்டாள யோகம்
கால சர்ப்ப யோகம்
விபரீத ராஜ யோகம்
நீச்ச பங்க ராஜ யோகம்
                        இது போன்ற யோகங்கள் பல இருந்தாலும் மிக முக்கியமான யோகங்கள் பற்றி மட்டும் இப்போது காண்போம்.

அஷ்டலக்ஷ்மி யோகம்


                    யோகங்களில் சிறப்பான யோகமாக இந்த அஷ்டலக்ஷ்மி யோகத்தை கொள்ளலாம். ராகு ஆறாமிடத்தில் நின்று குரு லக்ன கேந்திரம் அடைந்து நிற்பது அஷ்டலக்ஷ்மி யோகம் எனப்படும். பொதுவாக ராகு, கேது, சனி, சூரியன், செவ்வாய் போன்ற இயற்கை பாப கிரகங்கள் ஆறாமிடத்தில் நிற்பது நன்மையே செய்யும். ருண ரோக சத்ரு ஸ்தானம் என்னும் ஆறாமிடத்தில் பாப கிரகங்கள் நிற்பது அந்த இடத்தை நசிந்து போக செய்யும். அதனால் எதிர்ப்பு இல்லாத ஒரு வாழ்கையை அவர் அனுபவிப்பார், அதையும் மீறி எதிரிகள் வருவாரானால் அவர்களுக்கு அது சற்றேறக்குறைய அது அந்திம காலமாகவே இருக்கும் என்றால் அது மிகையல்ல. குரு பகவானானவர்  கேந்திரத்தில் நிற்பது தனித்த குருவாக இல்லாமல் இருப்பதே நல்லதாகும். குரு தனித்து இருந்தால் கிரந்தங்கள் கூறுவது
                        " அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு "      

என்பதேயாகும். இதிலிருந்து குரு தனித்து நிற்பது என்பது சுபமல்ல என்பது விளங்கும். இந்த குருவும் கேந்திரத்தில் நின்று ஆறாமிடத்தில் ராகு நிற்பது அஷ்டலஷ்மி யோகம் என்பதே!! இதன் பலன் மிகுந்த தனப்ரப்தம் உண்டு என்பது வெள்ளிடை. ஒருவன் தனம் பெற்றாலே மற்ற அனைத்துமே அவன் கைவரப்பெறும். இதனால் புகழ், சொத்து, செல்வாக்கு, சம்பத்து, ஆயுள், தோட்டம், வீடுகள் நில புலன்கள் போன்றவை கிடைக்கும். இதனால் இம்மாதிரியான ஜாதகர்கள் பெயரை சொன்னாலே அனைவருக்கும் தெரியுமளவுக்கு செல்வாக்கான வாழ்கையை பெறுவார்கள். இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு வெகுஜன தொடர்பு, தேக காந்தி ஆகியவைகள் தானாகவே வரும்.

   சுப கத்திரி யோகம்

                        லக்னத்திற்கு இருபுறமும் அதாவது பன்னிரெண்டாம் வீடு அல்லது இரண்டாவது வீட்டில் சுப கிரகமான குரு, வளர் பிறை சந்திரன், சுபரோடு சேர்ந்த புதன், போன்ற கிரகங்கள் இருந்தால் அது சுப கத்திரி யோகம் எனப்படும். இது மிகுந்த செல்வாக்கை தரக்கூடிய அமைப்பாகும். இந்த யோகமானது வாழ்வில் சிறிதளவேனும் சிரமம் இல்லாமல் வாழ்கையை அனுபவிக்ககூடிய அமைப்பாகும். ஒரு சிலர் தமது கடுமையான உடல் உழைப்பால் சம்பாதித்து குடும்பத்தை நடத்துவர். ஆனால் சிலர் தனது புத்திசாலித்தனத்தால் உடல் உழைப்பு இல்லாமலே புத்தியால் தனத்தை இயற்றுவர். இதையே கிராமப்புறங்களில்                                 " வாயிலேயே அபிஷேகம் செய்கிறான் " என்று கூறுவதுண்டு. இதையே புத்திமான் பலவான் என்றும் அழைப்பர் . சுப கத்திரி யோகம் பெற்றவர்கள் அடுத்தவருக்கு யோசனை சொல்வது மாதிரியான தொழில்களையே செய்வார்கள். கன்சல்டன்சி போன்ற வேலைகளிலேயே இவர்களால் நிலையாக இருக்க முடியும். மற்றபடி உழைப்பால் உடல் வருத்தும் தொழில்கள் இவர்களுக்கு அமையாது. படிப்பறிவு இல்லாவிட்டாலும் இவர்களுடைய திறமைகள் பல் துறைகளில் பளிச்சிடும்.

புதாத்திய யோகம்

                      ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பது புதாத்திய யோகம் எனப்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். பொதுவாக இந்த புதாத்திய யோகம் மற்ற பாப கிரகங்கள் பார்க்காவிட்டால் இந்த யோகமானது விரிவாக செயல்படும். புதன் கிரகமானது நவ கிரகங்களில் மிக வலிமை குன்றியது ஆகும். அதனால்தான் புதன் சுபரோடு சேர்ந்தால் சுபராகவும் பாபரோடு சேர்ந்தால் பாபராகவும் செயல்படும். எனவேதான் மற்ற பாப கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் இந்த யோகம் முழுமையாக செயல்படும். புதன் மற்ற கிரகங்களின் பார்வையில் படும்போது அவர்களுடைய பலன்களை செய்யுமே தவிர தனது பலன்களை செய்ய முடியாமல் போய்விடும்.
மோப்ப குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்க குழையும் விருந்து.
 என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப புதன் மற்றெந்த கிரகங்களின் பார்வையை பெறாமல் இருந்தால் நல்ல பலன்களை செய்யும். பொதுவாக புதன் விதியா காரகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வித்யா காரகன் சூரியனுடன் சேரும்போது அதிபலம் பெற்று சிறந்த கல்வியையும், கல்வியால் சிறந்த முன்னேற்றத்தையும் கொடுத்துவிடும் என்றால் அது மிகையல்ல. பட்ட படிப்பு படிப்பதற்கும் பல்கலைகழகங்கள் செல்வதற்கும் இந்த புதாத்திய யோகம் மிக அவசியமான ஒன்று. இவர்கள் கல்விக்காக எவ்வளவு தூரமாகினும் சென்று கல்வி பெறுவர். சிறந்த நாவன்மையும் இவர்களிடம் ஒருங்கே அமையபெற்று இருக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது இதனால்தான். எதையும் ஆராய்ந்து அறிதுகொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த அமைப்பானது நிச்சயமாக இருக்கும், இந்த புதாத்திய யோகத்தில் புதனாவது சுரியனாவது உச்சமாகவோ அல்லது ஆச்சியாகவோ இருந்தால் அவர்களே பல நாடுகளும் அறியும் சிறந்த அறிவாளிகளாக வருவர். அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அமைப்பு உறுதியாக உண்டு.                      

கஜகேசரியோகம்

                            இந்த கஜகேசரியோகம் என்பது ஜோதிடத்தில் ஒரு சிறப்பான யோகமாகும். மற்ற யோகங்களில் தலையானது என்று கூட சொல்லலாம். இந்த ஒரு யோகம் இருந்தால் மற்ற எந்த யோகமும் இல்லாவிட்டாலும் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும். மேலும் ஒரு ஜாதகத்தில் இருக்கும் யோகத்திற்கு தகுந்தமாதிரி அந்த சாதகனின் யோகம் விளங்கும். இது அவ யோகமாக இருந்தாலும் பொருத்தும். ஆனால் இந்த யோகம் இருந்தால் மற்றெந்த தோஷங்களும் அந்த ஜாதகனை ஒன்றும் செய்வது இல்லை. மற்ற தோஷங்களையும் யோகங்களையும் கட்டுப்படுத்தும் தன்மை இந்த யோகத்திற்கு உண்டு. இஃது எவ்வாறெனில் ஒரு ஜாதகத்தில் கஜ கேசரி யோகம் இருந்தால் மற்ற தோஷங்கள் எல்லாம் சூரியனை கண்ட பனிபோல விலகிவிடும். இந்த யோகத்தைப்பற்றி கீரனூர் நடராஜர் அருளிச்செய்த சாதக அலங்காரம் என்ற கிரந்தம் கூறும் கருத்தை பார்ப்போம்.

வருச்சி கேந்திரத்தில் மன்னவன் நிற்க
அரசன் கேந்திரத்தில் அம்புலி தானும் நிற்க
விரவு மற்றிடதின்மற்றோர் மருவிய தோசம்  - யானை
ஒரு சிங்கம் கண்டவாறு ஓடுமாம் கஜகேசரியாம் யோகம்.
                                                 _____ ஜாதக அலங்காரம் _____
சந்திரனின் கேந்திரத்தில் குரு பகவான் நிற்க, அந்த குருவினுடைய கேந்திரத்தில் சந்திரன் நிற்க அதாவது குருவும் சந்திரனும் கேந்திரத்தில் நின்றால் அது கஜ கேசரி யோகம் எனப்படும். இந்த கிரக அமைப்பானது ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த சாதகன் வேறு எந்த தோஷங்கள் இருந்தாலும் கவலைப்பட தேவை இல்லை, ஏனெனில் கஜம் என்றால் யானை என்றும் கேசரி என்றால் சிங்கம் என்றும் பொருள்படும். ஒரு யானை கூட்டத்தில் ஒரே ஒரு சிங்கம் சென்றால் எவ்வாறு அந்த யானை கூட்டமே சிதறி ஓடுமோ அதுபோல இந்த கஜ கேசரி யோகம் என்ற ஒன்று மட்டும் இருந்தால் மற்ற தோஷங்கள் அனைத்தும் விலகி ஓடிவிடும். இந்த கிரக நிலை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் நீங்கள் மற்றெந்த தோஷதிர்க்கும் பரிகாரம் செய்ய வேண்டியது இல்லை. இது செவ்வாய் தோஷதிர்க்கும் பொருந்தும்.
தர்மகர்மாதிபதி யோகம்

                   இந்த யோகத்தின் பெயரிலேயே அதனுடைய கிரக அடைவு உள்ளது தர்ம ஸ்தானம் என்பது ஒன்பதாமிடமாகும், கர்ம ஸ்தானம் என்பது பத்தாமிடமாகும். ஜாதகருடைய பூர்வ புண்ணிய பலன்களை அறியும் இடமாக இருப்பது ஐந்தாமிடமாகும் இதனால்தான் புத்திரர்களை ஐந்தாமிடதைக்கொண்டு நிர்ணயம் செய்கிறார்கள். ஒருவர் பெரும் குழந்தை செல்வம் புத்திர பாக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாக்கியம் உண்டா இல்லையா என்பதை ஐந்தமிடதைக்கொண்டே நிர்ணயிக்க முடியும். இந்த ஐந்தாமிடத்தில் பாப கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் ஐந்தாமிடதிர்க்கு ஐந்தாமிடமான ஒன்பதாமிடத்தை கொண்டே ஒருவருடைய புத்திர பாக்கியத்தை அறிய முடியும். இந்த ஒன்பதாமிடமானது ஒருவர் வாழும் வாழ்கை வசதியானதா அல்லது வறுமையானதா என்பதை தீர்மானிக்கும். சாதகனின் வாகன வசதி  சொந்த வீடு போன்றவற்றை இந்த ஒன்பதாமிடமே தீர்மானிக்கும். இதன் மூலம் ஒருவருடைய வாழ்க்கைதரம்  சமூகத்தில் அவர் பெற்றுள்ள அந்தஸ்து போன்றவற்றை கண்டுனறலாம். இந்த ஒன்பதாமிடத்ததிபதி கர்ம ஸ்தானம் என்னும் பத்தாமிடதோனுடன் கூடி இருப்பது தர்ம கர்மாதி யோகம் எனப்படும். இந்த யோகமானது அமைய பெற்றவர்கள் நிச்சியமாக ஒரு தொழில் அதிபராகவோ அல்லது மிக்க அதிகாரம் பெற்ற ஒரு பதவியிலோ இருப்பர்.